தவறான தொழில்முறை நடத்தையில் குற்றவாளியென கண்டறியப்பட்டவரின், சட்டத்தரணி தகைமையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைத்திய நிபுணரான டொக்டர் லக்ஷ்மன் லூசியன் டி சில்வா வீரசேன, உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சத்தியக் கடதாசி மூலம், சட்டத்தரணி ஜயந்த அத்தநாயக்க மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார்.
கொழும்பு 04, லாரீஸ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொத்து தொடர்பாக 05.10.1992 மற்றும் 01.08.1996 க்கு இடையில் இது இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், சட்டத்தரணியை குற்றவாளியென கண்டறிந்த உயர்நீதிமன்றம், சட்டத்தரணியின் பெயரை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
“பிரதிவாதியின் நடத்தை சட்டத் தொழிலுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை, அது வெளிப்படையாக அவமரியாதையானது, மற்றும் ஒரு சட்டத்தரணியாக செயற்பட தகுதியற்றவர். பிரதிவாதி உயர் நீதிமன்றத்தின் விதிகள் 1988ஆ் ஆண்டின் 60 மற்றும் 61 (சட்டத்தரணிக்கான நடத்தை மற்றும் ஒழுக்கம்) ஆம் இலக்க விதிகளையும் மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது” என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதி- ஜயந்த அத்தநாயக்கவின் மனைவி- வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த போதே உயிரிழந்துள்ளார்.
மறைந்த ஆக்னஸ் ஜோர்ஜியானா பொன்சேகாவின் எஸ்டேட்டின் உரிமையை சட்டப்பூர்வமான வாரிசுகளிடமிருந்து பறிக்கும் நோக்கத்தில் இரண்டு பிரதிவாதிகள் ஐந்து பத்திரங்களை மோசடியாக சான்றளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 42 (2) ன் வரம்பிற்குள் முதல் பிரதிவாதி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர் சட்டத்தரணியாக இருக்க தகுதியற்றவர்.




