பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த எழுப்பிய சிறப்புரிமை விவகாரம் தொடர்பான விசாரணைகளை, பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு முடிக்கும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு பிரதி சபாநாயகரிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இந்த கோரிக்கையை விடுத்தார்.
சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர், நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு சிறப்புரிமைப் பிரச்சினையைக் கேட்பதற்கு முன்னர் இடைக்கால உத்தரவை அமுல்படுத்துவது பாரிய குற்றமாகும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைக்கால உத்தரவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிதியமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மேலும் மீறுவதாகவும், அந்த கடிதத்தை நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் மற்றும் நடத்தைக்கான குழுவிற்கு விசாரணைக்காக அனுப்புமாறு பிரதி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.




