யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது இந்த மாநகரசபையின் ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே, வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் பதவியிழந்த இ.ஆர்னோல்ட், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல், வி.மணிவண்ணன் பதவிவிலகியதை தொடர்ந்து, மீண்டும் முதல்வராகிய ஆர்னோல்ட்டிற்கு நாளை மீண்டும் விசப்பரீட்சை நடக்கிறது.
நாளை வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆர்னோல்ட் தரப்பு பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது. குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை நம்பியே நாளை ஆர்னோல்ட் களத்திற்கு வருகிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ரெலோ, புளொட் கட்சியின் உறுப்பினர்களை வளைத்துப் போடுவதில் ஆர்னோல்ட் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
ஆர்னோல்ட்டின் வலையில் விழுந்தவர்களில் புளொட் தரப்பின் உறுப்பினர் ஒருவர். நாளைய வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் யாரும் பங்கேற்பதில்லையென புளொட் முடிவெடுத்த போதும், அதை ஏற்பதில் அந்த உறுப்பினர் தயக்கம் காட்டி வருவதாக தெரிய வருகிறது.
ரெலோ தரப்பின் இரண்டு உறுப்பினர்களின் நிலைப்பாடும் சந்தேகத்திற்குரியதே. உறுப்பினர் தனேந்திரன் ஏற்கெனவே கட்சி முடிவை மீறி ஆர்னோல்ட் விவகாரத்தில் செயற்பட்டு, கடந்த அமர்விலும் கலந்து கொண்டிருந்தார். அவரை என்ன வாக்குறுதியளித்து ஆர்னோல்ட் வளைத்தார் என்பது தெரியவில்லை.
பிரதி முதல்வர் ஈசனும் தயக்கத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
த.தே.கூட்டமைப்பின் 2 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தாலும், கிட்டத்தட்ட 19 வரையிலான உறுப்பினர்களிள் ஆதரவையே ஆர்னொல்ட் பெற வாய்ப்புள்ளது.
ஈ.பி.டி.பி கட்சியும் ஆர்னொல்ட்டின் வரவு செலவு திட்டத்தை எதிர்க்க வாய்ப்புள்ளது. இருந்தாலும், ஈ.பி.டி.பியினர் மணிவண்ணன் தரப்பில் கோபமாக உள்ளனர்.
காரணம், ஈ.பி.டி.பியின் தற்போதைய யாழ் மாநகரசபை உநுப்பினர்கள் மூவர், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுகின்றனர். அண்மையில் உயிரிழந்த சட்டத்தரணி மு.ரெமீடியஸ் தனது இநுதிக்காலத்தில் மணிவண்ணன் தரப்புடன் பேசி இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறப்படுகிறது. ரெமீடியஸ் தனது இறுதிக்காலத்தில் ஈ.பி.டி.பியுடன் அவ்வளவு நெருக்கமாக இருக்கவில்லை.
தமது உறுப்பினர்களை உருவிவெடுத்த மணிவண்ணன் தரப்பினருக்கு சாதகமாக செயற்படக்கூடாது எனவும் ஈ.பி.டி.பி கருதலாம்.
எவ்வாறாயினும், நாளை காலையில் இறுதி முடிவு தெரிந்து விடும்.




