தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் அண்மையில் நடைபெற்றது. மணிவண்ணனின் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில், கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில், கட்சியின் சின்னமான மானைப் போல வேட்பாளர்கள் அனைவரும் செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். மான்கள் கூட்டமாகவே போகும், வேட்பாளர்களும் கூட்டாக செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த யோசனை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் செயற்படுத்தும் போதுதான் சிக்கல் தோன்றும்.
அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது.
நேற்று யாழ்ப்பாணத்தில் சில போராட்டங்கள் நடந்தன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சுதந்திரதின கொண்டாட்டங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 போராட்டங்கள் நடந்தன.
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் முதலாவது போராட்டம் நடத்தினார்கள். அடுத்தது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நடத்திய போராட்டம். இதில் 17 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அடுத்த போராட்டம், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காந்தி சிலையின் முன்பாக நடத்தப்பட்ட போராட்டம்.
இதில் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஷ், அனந்தி சசிதிரன், வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன் உள்ளிட்ட வெகு சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
மணிக்கூட்டு கோபுர பக்கமாக சிவாஜிலிங்கம் திடீரென நகரக்கூடும் என நினைத்து பொலிசார் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
அந்த சமபயத்தில் வாகனமொன்று அந்த பகுதியை கடந்து, அருகிலுள்ள ஜெட் விங் ஹெட்டலிற்கு ஒரு வாகனம் சென்றது. சிறிது நேரத்தில் திரும்பி வந்தது. அப்போதுதான் போராட்டத்தில் நின்றவர்கள், இது க.வி.விக்னேஸ்வரனின் வாகனம் என்றனர்.
வாகனத்தில் முன்பகுதியில் விக்னேஸ்வரன் உட்கார்ந்து பயணிக்கிறார் என்றார் மற்றொருவர்.
ஜெட்விங் ஹொட்டலில் தங்கியிருந்த ஜனாதிபதியை சந்தித்து விட்டு அவர் திரும்பியிருந்தார்.
அவரது கட்சியின் மணிவண்ணன், பார்த்தீபன் உள்ளிட்ட சிலரும், கூட்டணி வைத்த அனந்தியும் அங்கு நின்றனர். அவர்களிற்கு விக்னேஸ்வரன், ரணிலை சந்திக்கும் விவகாரம் தெரிந்திருக்கவில்லை.
தனது கட்சிக்காரர்கள் சிலர் போராடிக் கொண்டு நிற்கிறார்கள், அவர்களை சூழ பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு, பதற்றமான சூழலை சந்தித்துள்ள நிலைமையில், அந்த பகுதியை கடந்து சென்றார் விக்னேஸ்வரன். போராட்டக்காரர்களை திரும்பியும் பார்க்கவில்லை.




