இலங்கை பங்களாதேஷிடம் இருந்து பெற்ற 200 மில்லியன் டொலர்களை செப்டெம்பர் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதால், மே 2021 இல் நாணய மாற்று ஒப்பந்தமாக பெறப்பட்ட கடன் செப்டெம்பர் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மொமன் கூறினார்.
“இலங்கை படிப்படியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு செப்டம்பர் வரை [கடனைத் திருப்பிச் செலுத்த] அவகாசம் அளித்துள்ளோம்,” என்று கொழும்பில் இருந்து திரும்பிய மொமன், பத்மா மாநில விருந்தினர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் அதிதியாக கலந்து கொண்டு நாடு திரும்பும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மார்ச் மாதம் 200 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும் ஆனால் இலங்கை நாடு மேலும் கால அவகாசம் கோரியது. இதனையடுத்து, பங்களாதேஷ் வங்கி இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
“புதிய அரசாங்கம் நாட்டை நன்றாக நடத்தி வருகிறது” என்று மொமன் மேலும் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் அதன் ஆழமான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீளும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் அரசாங்கம் மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தனது நாட்டின் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மொமன் கூறினார்.