கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியுமுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுவருடத்தை முன்னிட்டு நண்பர்கள் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர். நள்ளிரவில் ஏனைய நண்பர்கள் சென்றுவிட, கொல்லப்பட்டவரும், நண்பர் ஒருவருமே அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
அப்போது, மற்றொரு குழு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் தவக்குமார் சுரேஸ் படுகாயமடைந்தார். அவருடன் தங்கியிருந்த மற்றைய இளைஞன் காயங்களுடன் தப்பியோடி விட்டார்.
இரண்டு குழுக்களிற்கிடையிலான மோதலே கொலைக்கு காரணமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட இளைஞனின் பிறந்தநாள் கிளிநொச்சியிலுள்ள பிரபல விடுதியொன்றில் நடைபெற்றது. அப்போது மதுபானம் அருந்திய போது, நண்பர்களிற்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தகராறில் ஈடுபட்ட இளைஞனின் பிறந்தநாள் பின்னர் விடுதியொன்றில் கொண்டாடப்பட்ட போது, உயிரிழந்த இளைஞனும் நண்பர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின்னர் அந்த கும்பல் இரண்டாக பிரிந்து மோதிக் கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் வாள்வெட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் சிலரை பொலிசார் தேடி வருகின்றனர்.




