யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 105 பேரும் நேற்று (19) இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 105 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.
இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் 105 பேரும் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது ஒருவித தோல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அத்துடன் படகு உரிமையாளரை 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அவர்களை மிரிஹான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அது வரை, 105 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு
மாற்றப்பட்டனர்.