யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட செங்குந்தா சதுக்கத்தின் கல்வெட்டில் உள்ள யாழ் மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் பெயரை நீக்குமாறு, யாழ் மாநகர ஆணையாளரிடம் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.
யாழ் மாநகரசபையினால் அண்மையில் கல்வியங்காடு சந்தை வளாகத்தில் செங்குந்தா சதுக்கம் என்ற பெயரில் கடைத்தொகுதி திறந்து வைக்கப்பட்டிருந்தது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி திட்ட நிதியுதவியில் இது அமைக்கப்பட்டிருந்தது.
யாழ் மாநகரசபை சுகாதாரக்குழுத்தலைவர் வ.பார்த்தீபன் தலைமையிலான நிகழ்வில், மாநகர முதல்வர், ஆணையாளர் கலந்து கொண்டு கடைத்தொகுதியை திறந்து வைத்தனர்.
அதன் கல்வெட்டில், யாழ் மாநகரசபை சுகாதாரக்குழுத் தலைவர் வ.பார்த்தீபன் தலைமையில் நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டில் உள்ள வ.பார்த்தீபனின் பெயரை அகற்றுமாறு குறிப்பிட்டு, யாழ் மாநகரசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 10 பேர் கையெழுத்திட்ட மகஜர் இன்று, யாழ் மாநகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வ.பார்த்தீபன் அந்த வட்டாரத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால், பெயரை நீக்குமாறு ஈ.பி.டி.பி தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் தரப்பினர் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவிக்கையில், “மாநகரசபையிலுள்ள குழுக்களின் தலைவர்களின் தலைமையிலேயே முக்கிய நிகழ்வுகள் நடந்து வருகின்றது. அந்த வரிசையில்தான் வ.பார்த்தீபன் செந்குந்தா சதுக்க திறப்பு விழாவில் தலைமை தாங்கினார். அதனால் அவரது பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. இதற்கு முதல் மாநகரசபையினால் பாரதியார் சிலை திறப்பு விழா நடத்தப்பட்டது. அதற்கு தலைமைதாங்கியவர் மாநகரசபையில் மராமத்து குழுத்தலைவர் ரெமீடியஸ். அவர் ஈ.பி.டி.பியை சேர்ந்தவர். அவரது வட்டாரம் இல்லாத இடத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியின் கல்வெட்டில் ரெமீடியசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பியினரின் தற்போதைய கோரிக்கை சிறுபிள்ளைத்தனமானது“ என்றனர்.




