29.3 C
Jaffna
March 29, 2024
மருத்துவம்

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: திருமணமாகி ஒரு மாதமாகியும் தாம்பத்தியம் தடைப்படுவது ஏன்?

மருத்துவத்துறை சார்ந்த உங்கள் சந்தேகங்கள் எதுவானாலும் எழுதி அனுப்புங்கள். தமிழ் பக்கத்தின் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ (0766722218) அல்லது pagetamilmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

எம்.சுமதி
வட்டுக்கோட்டை

டாக்டர் ஞானப்பழம் தொடரில் எல்லாப் பெண்களிற்கும் வாய்வழி கருத்தடை மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லையென குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த மாதிரியான சூழலில், வாய்வழி கருத்தடை மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது?

டாக்டர் ஞானப்பழம்: 

பெண்ணுக்கு கல்லீரல் நோய்கள், இயல்புக்கு மாறான கல்லீரல் செயல்பாடு, இயல்புக்கு மாறான சிறுநீர்க் குழாய் அல்லது வெஜைனல் ரத்தப்போக்கு, சுவாசப் பிரச்னை, ரத்தம் உறைதல் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களுக்கு வாய்வழி கருத்தரிப்பு மாத்திரை பரிந்துரைக்கப்படுவது இல்லை. தவிர, நீரிழிவு நோய், பாலூட்டும் பெண்கள் (குறைந்தது முதல் ஆறு மாதங்களுக்கு), வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவது இல்லை. எனவே, வாய்வழிக் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், உங்கள் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைப்படி நடப்பது அவசியம்.

எஸ்.டிலானி (23)
மாங்குளம்

எனக்கு திருமணமாகி 6 மாதங்கள். 2 மாத கர்ப்பமாக உள்ளேன். கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?

டாக்டர் ஞானப்பழம்:  

கர்ப்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மகப்பேறு மருத்துவர் தெரிவிக்க வேண்டும். ‘மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள், குழந்தையும் மிக ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது, கருச்சிதைவு, கருக்கலைவு போன்றவற்றுக்கு வாய்ப்பு இல்லை’ என மருத்துவர் உறுதியாகத் தெரிவித்திருந்தால், தாராளமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.

ஏற்கெனவே, கருத்தரித்தபோது, குழந்தை முன்கூட்டியே பிறந்திருந்தால், கர்ப்பப்பைவாய் சற்றுத் தளர்வுற்று இருந்திருந்தால், எடை குறைவாகக் குழந்தை பிறந்திருந்தால், ஏற்கெனவே கருச்சிதைவு அல்லது கருக்கலைத்தல் செய்திருந்தால், துளித்துளியான இரத்தக்கசிவு, பிளீடிங் இருந்தாலோ, உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பிளசன்டா ப்ரேவியா (Placenta praevia) எனப்படும் கருப்பையின் முகத்துவாரத்தை பிளசன்டா அடைத்திருக்கும் நிலையிலும் உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.

உடலுறவு வைத்துக்கொள்ளும்போது, ஆணின் எடை பெண்ணின் வயிற்றின் மீது அழுத்தக் கூடாது.

வேகமாக ஈடுபடுவதையும், வாய்வழி உடலுறவையும் தவிர்க்க வேண்டும். இருவரும் பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

தி.மனோ
திக்கம்

எனக்குத் திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. நான் ஆணுறை அணிந்து உடலுறவுகொள்ளும்போது எல்லாம் விரைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது?

டாக்டர் ஞானப்பழம்:

நீண்ட விரைப்புத்தன்மைக்கு, தொடர், நீண்ட தூண்டுதல் அவசியம். ஃபோர்ப்ளே எனப்படும் நீண்ட தூண்டலுக்குப் பிறகு, ஆணுறை அணியும்போது தூண்டுதல் தடைபடுகிறது. இது தற்காலிகமானதுதான். இது தவிர, ஆணுறை அணியும் தருணத்தில் ஆணின் கவனம் சிதறலாம். இதனால், விறைப்புத்தன்மை குறைந்துவிடுகிறது.

இதைத் தவிர்க்க, ஃபோர்ப்ளே தொடங்குவதற்கு முன்பே, ஆணுறை அணிந்துகொள்வது நல்லது. இதை மனைவியைச் செய்யச் சொல்லலாம். இதுவே, ஆணுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும். எந்தத் தடையுமின்றி மகிழ்ச்சியான முறையில் தாம்பத்திய உறவுகொள்ளத் துணைசெய்யும். இல்லை எனில், ஆணுறை அணிந்த பிறகு விறைப்புத்தன்மைக்காக மீண்டும் மிகத் தீவிரமாக ஃபோர்ப்ளே செய்யவேண்டிய நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

அதேபோல நிறையப் பேருக்கு இருக்கும் சந்தேகம், ஆணுறை அணிந்தால் உடலுறவு மகிழ்ச்சி குறைந்துவிடுமா என்பதுதான். அப்படி ஏதும் இல்லை. நவீன ஆணுறைகள் மிகவும் மெல்லியவை, வழுவழுப்புத்தன்மை கொண்டவை, அலைபோன்ற அமைப்புடன், புள்ளிகள் கொண்டதாக இருக்கின்றன. இது தம்பதிகளுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கிறது.

சினேகா (26)
செங்கலடி

நான் தனியார்துறையில் வேலை செய்கிறேன். தினமும் அலுவலக பஸ்ஸில் அலுவலகம் சென்று வருகிறேன். கர்ப்ப காலத்தில் பயணம் மேற்கொள்வது பிரச்சினையில்லையா?

டாக்டர் ஞானப்பழம்:

பயணம் மேற்கொண்டதால் கர்ப்பம் கலைந்தது என எந்தத் தகவலும் இல்லை. ஆனால், பயணம் மேற்கொள்வது சரியா என்பதை கர்ப்பிணிதான் முடிவுசெய்ய வேண்டும். அவரைத் தவிர வேறு யாராலும் சரியானதைத் தேர்வுசெய்ய முடியாது. இருப்பினும், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்றவற்றில் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாகனங்களில் அதிர்வைத் தாங்கக்கூடிய அமைப்புச் சரியாக இல்லை.

முக்கியமாக, நீங்கள் பயணிக்கும் வீதி தரமானதா என்பதே முதன்மையானது.

பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானதுதான். இருப்பினும், பஸ்ஸில் சக்கரங்களுக்கு நேர் மேலே அமர்வதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள், ரயிலை தேர்வு செய்யலாம். அதுவும் எட்டாம் மாதம் வரை மட்டும்தான். ஒன்பதாம் மாதம் முதல் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்துக்குச் செல்வதில் தவறு இல்லை. ஆனால், அலுவலகப் பணியால் அதிகச் சோர்வு, களைப்பு போன்ற பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுவாசித்தலில் சிரமம், காலில் வீக்கம், உயர் இரத்த அழுத்தம், கர்ப்பம் கலைய வாய்ப்பு உள்ளவர்கள், கட்டாயம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும். மற்றவர்கள் பிரசவம் வரையில் அலுவலகம் செல்வதில் பிரச்னை ஏதும் இல்லை.

மு.சாருஜன்
நானாட்டான்

எனக்கு திருமணமாகி ஒரு மாதமாகிறது. இன்னும் மனைவியுடன் திருப்தியாக உடலுறவு கொள்ளவில்லை. நான் தயாராகி தாம்பத்திய உறவுக்கு முயற்சிக்கும்போது மனைவியால் தாங்க முடியாததால்  கத்தி அழ ஆரம்பித்துவிடுகிறார். இதனால் எமக்குள் மோதல் வருகிறது. நான் மனைவியை குற்றம் சொல்ல, அவர், என்னால்த்தான் முடியாமலுள்ளதாக பதிலுக்கு குற்றம் சொல்கிறார். நான் என்ன செய்வது? (நீண்ட கடிதத்தில் சுருக்கம்)

டாக்டர் ஞானப்பழம்:

உங்கள் மனைவிக்கு கன்னித்திரை என்று சொல்லப்படும் ஹைமன் (Hymen) தடிமனாக இருக்கலாம். ஹைமனாக்டமி (Hymenectomy) என்கிற சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்யலாம்.

எதற்கும் நீங்கள் முறையான மருத்துவர் ஒருவரை அணுகினால்தான், உண்மையில் என்ன பிரச்சனையென கண்டுபிடிக்கலாம். தாமதிக்காமல் அதை செய்யுங்கள்.

பொதுவாகவே சில விளக்கங்களை சொல்கிறேன்.

தம்பதிகளிடையே பல்வேறு தீவிர உளவியல் சிக்கல்கள் தோன்றவும், இருவரிடையே சண்டை சச்சரவுகள், விரோதம் தோன்றவும் ஏன் தாம்பத்தியம் முறிவுபடவும் முக்கிய காரணமாக இருப்பது பாலியல் பிரச்னைகள்தான். மிகச் சமீப காலம் வரையில், பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் சிக்கலானதாக, கடினமானதாக மற்றும் திருப்தியற்றதாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம், பிரச்னை என்ன என்று மருத்துவர்களால் சரியாகக் கணிக்க முடியாததுதான்.

தற்போது, நன்கு திறன்மிக்க மருத்துவர்கள் பலர் இந்தப் பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வந்துவிட்டனர். இதன்மூலம், பாலியல் பிரச்னைகளை வைத்து ஏமாற்றும் தகுதியற்ற நபர்களிடமிருந்து தப்பித்து, பிரச்னைகளில் இருந்து மீண்டு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்வு வாழ்கின்றனர். இதற்கு நாம் மருத்துவர்கள் மாஸ்டர்ஸ் மற்றும் ஜோன்சன் மற்றும் பாலியல் தொடர்பான இதர ஆராய்ச்சியாளர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். இவர்கள், பாலியல் மனநிலை (இயல்பான செயல்பாடு) மற்றும் பெத்தோலஜி எனப்படும் நோய்க்கூறு இயல் (இயல்புக்கு மாறான செயல்பாடு) தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, முடிவுகளை வெளியிட்டனர். இந்த ஆராய்ச்சியானது, பாலியல் பிரச்னைகளைக் கையாள்வது தொடர்பாகப் பல மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவியது. மேலும், பல மருத்துவர்களை முழு நேர பாலியல் பிரச்னைகளைத் தீர்க்கும் மருத்துவர்களாகவே மாற்றியது. இப்படித்தான், நவீன மருத்துவத்தில் பாலியல் மருத்துவம் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது.

பொதுவாக செக்ஸ் பிரச்னை என வருபவர்களுக்கு, அவர்கள் பிரச்னையைப் பொறுத்து, செக்ஸ் தெரப்பி, செக்ஸ் கவுன்சலிங், மெடிக்கல் தெரப்பி (சிகிச்சையுடன் மருந்து அளித்தல்), அறுவைசிகிச்சை (சரி செய்தல்), ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரப்பி, வாக்குவம் சக்‌ஷன் கருவி, ஆண் உறுப்பில் ஊசி செலுத்துதல் (Intracavernous), பீனைல் இம்பிளான்ட் சர்ஜரி, நடத்தை மாறுபாடு தெரப்பி, சப்போர்ட்டிவ் தெரப்பி, மெரிட்டல் தெரப்பி என பல வகை உள்ளன.

தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தும், பல நேரங்களில், மனப்பதற்றம், படபடப்பு போன்றவை காரணமாக ஆண்/பெண்ணுக்கு தங்கள் துணையுடன் இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்தமாதிரியான சூழலில், இவர்களுக்கு மாத்திரை மருந்து அளிப்பதில் பிரயோஜனம் இல்லை. அதேநேரத்தில், `உங்களுக்கு ஒன்றுமில்லை, கவலைப்படாதீர்கள், நம்பிக்கையாக இருங்கள்’ என்று சொல்வதால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. இவர்களுக்கு செக்ஸ் தெரப்பி அளிக்கப்படும். அவர்களது படபடப்பு, பதற்றத்தை வெற்றிகொள்ள பயிற்சி அளித்து, தாம்பத்திய பிரச்னையில் இருந்து மீட்கப்படுவர்.

இந்த சிகிச்சையின்போது, மருத்துவமனையிலேயே சில குறிப்பிட்ட செக்ஸ் பயிற்சிகளை தம்பதிகள் செய்ய வேண்டும். பயிற்சிகள் மேற்கொள்ளும்போது ஏற்படும் பயம், சந்தேகங்களை மருத்துவரிடம் சொல்லி, கேட்டு தீர்க்க வேண்டும். வீட்டுக்குச் சென்று செய்துபார்க்கச் சொல்லப்படும். இப்படி பதற்றம், படபடப்பு அவர்களிடமிருந்து அகற்றப்பட்டு, மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கைக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

இங்கே சொன்னது ஒரு உதாரணத்துக்குத்தான். ஒட்டுமொத்த சிகிச்சையும் 5 முதல் 10 முறை மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை பெறுவதன் மூலம் முடிந்துவிடும்.”

செக்ஸ் தெரப்பியைப் பொறுத்தவரையில், தம்பதியரில் ஒருவருக்குத்தான் பிரச்னை உள்ளது என்று முடிவுகட்டிவிட முடியாது. இருவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான். உதாரணத்துக்கு, கணவனுக்கு ஆண் உறுப்பு விறைப்படைதலில் பிரச்னை உள்ளது எனில், அது அவனை மட்டும் பாதிப்பதில்லை. தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியாமல் அந்த மனைவியும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார். கணவன் மிக சீக்கிரத்தில் விந்தணுவை வெளியிட்டால், மனைவியால் உச்சத்தை அடைய முடியாது. அதேபோல், பெண்ணின் வெஜைனல் இறுக்கமாக இருந்தால், கணவனால் உள்ளே நுழைக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார். எனவே, இருவரும் சிகிச்சைக்கு வருவதன் மூலம்தான், வெற்றிகரமாகப் பிரச்னையில் இருந்து மீள முடியும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment