பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பிலான உண்மைகளை முன்வைக்க ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு காலை இழந்த யேசுராஜ் கணேசன் மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனிப்பட்ட முறைப்பாட்டினை கவனத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்னவினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை கவனத்திற்கொண்ட நீதவான், இது தொடர்பான உண்மைகளை முன்வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.




