ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆலோசகரும், நவீன ரஷ்ய சித்தாந்தவாதியுமான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினாவைக் கொன்றது உக்ரைனிய புலனாய்வு சேவை என தெரிய வந்துள்ளது.
இதற்கான ஆதாரங்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிற்குள் கடந்த சனிக்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் டாரியா டுகினா கொல்லப்பட்டார்.
மொஸ்கோவிற்கு வெளியே ஒரு நெடுஞ்சாலையில் டுகினா ஓட்டிக்கொண்டிருந்த டொயோட்டா லாண்ட் குரூஸர் காருக்குள் வைக்கப்பட்ட குண்டு, வெடிக்கும் கருவி மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாக ரஷ்ய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
வீழ்ச்சியடைந்திருந்த ரஷ்யாவை நவீன ரஷ்யாவாக மாற்றும் சித்தாந்தத்தை கொண்ட அலெக்சாண்டர் டுகின், புடினின்ஆலோசகராக உள்ளார்.
டுகின் – ஒரு தத்துவஞானி, எழுத்தாளர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர். மேற்கில் சிலர் “புடினின் மூளை” என்று அவரைஅழைத்தனர்.
ரஷ்யா மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உக்ரைனின் கிரிமியாவை 2014இல் கைப்பற்றியது. தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. நவீன ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என பல வருடங்களின் முன்னரே அலெக்சாண்டர் டுகின் தெரிவித்திருந்தார்.
டுகினே இலக்கு வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. தாக்குதலிற்கு சற்று முன்னதாக டுகின் வேறு காரிற்கு மாறியிருந்தார்.
இந்ததாக்குதல்தொடர்பானமுழுமையான விபரங்களை ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சேர்வீஸ் (FSB) வெளியிட்டுள்ளது. “குற்றம் உக்ரேனிய சிறப்பு சேவைகளால் தயாரிக்கப்பட்டு செய்யப்பட்டது” என்று அதுதெரிவித்துள்ளது.
ஒரு பெண்ணும் அவரது சிறிய மகளும் ஜூலை மாதம் ரஷ்யாவிற்கு வந்து, அதே வீட்டுத் தொகுதியில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, டுகினாவின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து தாக்குதலுக்கு ஒரு மாதம் தயார் செய்ததாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (20) மாலை மொஸ்கோவிற்கு வெளியே டிராடிட்சியாவில் நடந்த ஒரு குடும்பநிகழ்வில், டுகினாவும் அவரது தந்தையும் கலந்துகொண்டனர். அந்த பகுதிக்கு தாக்குதலாளியும் சென்றார். தொலை இயக்க குண்டை வெடிக்க செய்த பின்னர், அந்தப் பெண் 21ஆம் திகதி ப்ஸ்கோவ் பகுதி வழியாக எஸ்டோனியாவிற்குத் தப்பிச் சென்றதாக FSB தெரிவித்துள்ளது.
உக்ரைனின் அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறி, கொலையாளியின் பாதுகாப்பு கண்காணிப்பு வீடியோவையும், அவரது இராணுவ அடையாள அட்டையையும் உளவுத்துறை வெளியிட்டது.
குற்றவாளியின் பெயர் நடால்யா பாவ்லோவ்னா வோவ்க்.1979 இல் பிறந்தார். அவர் ஜூலை 23, 2022 அன்று தனது 12 அல்லது13வயதுமகள் சோபியா ஷபானுடன் ரஷ்யாவிற்குள் நுழைந்துள்ளார்.
டார்யா டுகினா வசித்த வீட்டில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, அவரது வாழ்க்கை முறை பற்றிய தகவல்களைப் பெற்றுள்ளார். டுகினாவை பின்தொடர்ந்து, மினி கூப்பர் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.
அந்த பெண் ரஷ்யாவிற்குள் நுழையும்போது கஜகஸ்தான் பதிவு இலக்கத்தகட்டை பொருத்தியிருந்ததையும், தப்பித்து வெளியேறும் போது உக்ரைன் இலக்கத்தகட்டை பொருத்தியிருப்பதையும் வெளிப்படுத்தும் கண்காணிப்பு கமரா காட்சிகளையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.
நடாலியா வோவ்க் போலி ஆவணங்களுடன் ரஷ்யாவிற்கு வந்துள்ளார்.தற்போது ரஷ்யா அந்தப் பெண்ணை சர்வதேச தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்க்க விரும்புகிறது.
FSB வெளியிட்ட வீடியோவில் நடால்யா வோவ்க் ரஷ்யாவிற்குள் நுழைந்து, டுகினா வீட்டுப் பகுதியில்அவரை பின்தொடர்வது, எஸ்தோனியாவுக்குச் தப்பிச் செல்லும் காட்சிகள் உள்ளன.
எல்லைக் காவலர்களின் உடலில் பொருத்தப்பட்ட கமராவின் மூலம், தப்பிச் செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளன.
தாக்குதலாளிநடால்யா, உக்ரைனின் அசோவ் படைப்பிரிவை சேர்ந்தவர் என, அவரது சேவை அடையாள அட்டையையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது. அதில் 3057 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை தொடர்ந்து உக்ரைனில் அசோவ் படைப்பிரிவு ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் அந்த அடையாள அட்டை இலக்கம் தமது பிரிவினுடையதல்ல, அது உக்ரைன் தேசிய காவலரின் 12 வது படைப்பிரிவினுடையது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவிலிருந்து தப்பியோடி இப்போது உக்ரைனில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய அரசியல்வாதி இலியா பொனோமரேவ், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் யூடியூப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தேசிய குடியரசு இராணுவம் என்று அழைக்கப்படும் அறியப்படாத எதிர்க்கட்சி இயக்கம் தாக்குதலை நடத்தியதாக குறிப்பிட்டார்.
எனினும், அது திசைதிருப்பல் நோக்கம் கொண்ட அறிவிப்பதாக இருக்கலாமென கருதப்படுகிறது.