கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டுளள்னர். அந்த குடும்பத்திற்கு சொந்தமான தட்டுக்கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் 50,000 ரூபாய் அபராதம் விதித்திருந்த பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் கல்லம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிக்குட்டன்(51). இவரின் மனைவி சந்தியா(46). இவர்களுக்கு அஜீஷ்(19) என்ற மகனும், அமேயா(13) என்ற மகளும் இருந்தனர். மணிக்குட்டனின் சித்தி தேவகி(85) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்தார்.
மணிக்குட்டன் சாத்தம்பாறை பகுதியில் தட்டுக்கடை (சிறிய உணவகம) ஒன்றை நடத்தி வந்தார்.
தட்டுக்கடை சுகாதாரமாக இல்லை என கடந்த சில நாள்களுக்கு முன் பஞ்சாயத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருந்தனர். அபராத தொகையை செலுத்த முடியாமல் மணிக்குட்டன் தனது தட்டுக்கடையை இரண்டு நாட்களாக பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தட்டுக்கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் நேற்று காலை மணிக்குட்டனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
மணிக்குட்டனை அழைத்த போது அவரது தாயார், வீட்டின் இன்னொரு அறையிலிருந்து வந்துள்ளார். கடை திறப்பை எடுக்க சென்ற போது, மணிக்குட்டன் குடும்பம் தங்கியிருந்த குதி பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடை ஊழியரும், மணிக்குட்டனின் மருமகன் ஒருவரும் கதவை உடைத்து உள்நுழைந்த போது, முன் பகுதியில் மணிக்குட்டன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
மற்ற நான்குபேரும் வீட்டின் உள் அறையில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர்.
அவர்கள் இறந்த விடயம், ஒரே வீட்டிலிருந்த மணிக்குட்டனின் தாயாருக்கு தெரியாது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், `மணிக்குட்டனுக்கு ஏற்கனவே கடன்கள் உண்டு. இந்த நிலையில் அவரின் தட்டுக் கடை சுத்தமாக இல்லையென குறிப்பிடடு உணவு பாதுகாப்பு துறையினர் 50,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தனர். கடையை சுத்தம் செய்த பின்னரே மீண்டும் திறக்கலாம் என அறிவித்தனர். இந்த காரணத்தால் அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம்” என்றனர்.
ஆனால் கடை ஊழியர் தெரிவிக்கையில், திருவனந்தபுரம் சென்று எல்லாம் சரி செய்யப்பட்டு, அபராதத் தொகையை செலுத்தியதாக மணிக்கூட்டன் கூறியிருந்தார். நேற்று சனிக்கிழமை கடையை திறக்குமாறு என்னிடம் கூறினார். அதனாலேயே கடையை திறக்க வந்தேன்’ என்றார்.
தற்கொலைக்கான காரணம் பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




