அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்பு, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனத் தெரியவந்த இந்தக் குழுவில் 35 பெரியவர்களும் 16 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகளும் அடங்குவர்.
100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியப் படை வீரர்கள் அடங்கிய விமானத்தில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு இந்தக் குழு நாடு கடத்தப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குழுவினர் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மர்லன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குழுவைச் சேர்ந்த 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆட்கடத்தல் முயற்சியில் நேரடியாக ஈடுபட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.




