அமெரிக்க தலைமையிலான படைகள் வியாழக்கிழமை அதிகாலையில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பைச் சேர்ந்த ஒரு “அனுபவம் வாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பாளரை” கைது செய்ததாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
“கைது செய்யப்பட்ட நபர் ஒரு அனுபவம் வாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பாளர், சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர்” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கூட்டணிப் படைகள் பெயரை வெளியிடவில்லை. ஆனால் பிடிபட்ட பயங்கரவாதி ஹனி அகமது அல்-குர்தி என்று அறிக்கைகள் கூறுகின்றன.
இருப்பினும், அது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
வடக்கு சிரியாவில் வியாழக்கிழமை (ஜூன் 16) விடியற்காலையில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி நடவடிக்கை, துருக்கிய ஆதரவு சிரிய எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ மாகாண கிராமத்தில் நடைபெற்றது. இராணுவ ஹெலிகொப்டர்கள் சில நிமிடங்கள் மட்டுமே தரையிறங்கி, நடவடிக்கையை முடித்துக் கொண்டு புறப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு மற்றும் AFP நிருபர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க படைகள் இதற்கு முன்னர் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய அரசின் அபு இப்ராஹிம் அல் குராஷி கொல்லப்பட்டார். அவர் தனது உடையில் கட்டியிருந்த வெடிகுண்டின் மூலம் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். 2019 ஆம் ஆண்டு வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய அரசின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்.
jற்போதைய தாக்குதலில் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.
இரண்டு ஹெலிகொப்டர்கள் இலக்கு வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஹுமைராவில் தரையிறங்கி ஏழு நிமிடங்களுக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றதாக கண்காணிப்புத் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறினார்.
“அமெரிக்காவின் செயல்பாடு விரைவாகவும் சுமுகமாகவும் இருந்தது,” என்று அவர் கூறினார்.
“இது அலெப்போ நகரின் வடகிழக்கில் மற்றும் துருக்கிய எல்லையில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள ஹுமைரா கிராமத்தில் நடந்தது.” இந்த நடவடிக்கை முடிந்ததும், சர்வதேச கூட்டணி விமானங்கள் லாஃபர்ஜ் தளத்தில் தரையிறங்கியது என்று கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கிய ஆதரவு சிரிய எதிர்ப்பு போராளிகள் மற்றும் தஹ்ரிர் அல்-ஷாம் போன்ற ISIS அல்லாத தீவிரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவின் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் அரிதாகவே காணப்படுகின்றன.
இந்த நடவடிக்கை வெற்றியடைந்ததாக கூறிய வெள்ளை மாளிகை, கூட்டணிப் படைகளுக்கு காயமோ அல்லது கூட்டணி விமானங்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
எனினும், சிரியாவின் எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை வெள்ளை மாளிகையோ அல்லது கூட்டணிப் படைகளோ வெளியிடவில்லை.




