தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (27) வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 13ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இரதோற்சவம், பெருமளவான பக்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 9.40 மணியளவில் சந்நிதி வேலவன் தேரில் எழுந்தருளினார்.
இதனையடுத்து, பக்தர்கள் புடைசூழ சந்நிதி வேலவன் ஆலய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற முருகத் தலங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர்.
ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனிடையே, வருடாந்த மகோற்சவத்தின் இறுதி முக்கிய நிகழ்வான கடல்த் தீர்த்தோற்சவம் நாளை (28) நடைபெறவுள்ளது.
இதனுடன் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.




