இருபாலையில் வீடொன்றிற்குள் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 7 பேர் கைது செய்ய்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிள்ளன.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் வீடொன்றிற்குள் அகழ்வு மேற்கொண்டு கொண்டிருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலின் பேரில், 7 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னிலங்கை வாசிகளில் ஓய்வுபெற்ற பொலிஸ், இராணுவத்தினரும் உள்ளதாக தெரிய வருகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மின் பயன்பாடு அற்ற டெட்டனேற்றர்கள், மின் டெட்டனேற்றர்கள், யூரியா, யூரியாவை வெடிமருந்தாக மாற்றும் ஜெல், கொங்கிறீட் உடைக்கும் உபகரணங்கள் என்பன அவற்றில் அடங்குகின்றன.
பதுளை, மகரகம, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களும் புதையல் தோண்டும் பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருபாலையிலுள்ள அந்த வீட்டில் இரவு வேளைகளில் ‘திடீர் திடீனெ உருளுமாம்… திடீர் திடீரென உடையுமாம்’ சந்திரமுகி பட பாணியில் சத்தங்கள் கேட்பதாக வீட்டு உரிமையாளர் உணர்ந்துள்ளார். வீட்டுக்குள் ஏதோ விபரீதம் இருப்பதாக அவர் கருதினார்.
நண்பர்களின் பரிந்துரையின் பேரில், வட்டுக்கோட்டையிலுள்ள ஒரு பூசகரிடம் சென்றுள்ளார். அந்த வீட்டுக்குள் ஏதோ ஒரு வில்லங்கம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதன்பின்னர் வீட்டு உரிமையாளர்கள் கிளிநொச்சியிலுள்ள ஒரு பூசகர், ஒரு பௌத்த பிக்குவிடமும் சென்றுள்ளனர். அவர்களும் வீட்டுக்குள் ஏதோ வில்லங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி யிலுள்ள பூசகர் ஊடாக தென்னிலங்கையை சேர்ந்த குழுவொன்று அறிமுகமாககியுள்ளது. இந்த குழு ஏற்கனவே புதையல் தோண்டுவதில் அனுபவமுள்ளவர்கள். இராணுவத்திலிருந்தும், பொலிசிலிருந்தும் விலகியவர்களும் இந்த குழுவில் இருந்தனர்.
கட்டப்பிராயிலுள்ள “சந்திரமுகி- வேட்டயாபுர அரண்மனையில்” திடீர் திடீரென உருள்வதற்கும், திடீர் திடீரென உடைவதற்கும் காரணமான “அந்த மர்மம்” நிலத்திற்குள் புதைந்துள்ளதாக சாமியார்கள் சொன்னதை நம்பி, நேற்று வீட்டுக்குள் அகழ்ந்துள்ளனர்.
தோண்டத்தோண்ட வீட்டின் கொங்கிறீட் அடித்தளமே் வந்ததே தவிர,“சந்திரமுகி“ பிசாசோ, புதையலோ வரவில்லை. இன்னும் சற்று ஆழத்தில் அனு இருக்கிறதென வைத்தாலும், அது வருவதற்குள் பொலிஸ் அங்கு வந்து விட்டது.
வீட்டில் அசாதாரண றடமாட்டம், சத்தங்கள் கேட்டதையடுத்து, அந்தப்பகுதியிலுள்ள ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டது. வீட்டிற்குள் கொலை ஏதாவது நடக்கிறதோ என்ற சந்தேகத்தில் பொலிசாருக்கு அறிவித்து விட்டார்.
பொலிசார் வந்து 7பேரையும் அள்ளிச் சென்று விட்டனர்.
வீட்டுக்குள் ஏதோ அமானுஷ்ய சக்தியிருப்பதாக நம்பி, பூசாரிகளின் கதைகளை நம்பி, வீட்டை தோண்டி சேதப்படுத்தியதுமில்லாமல், இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் வீட்டு உரிமையாளர்.




