ஜூன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதம் குறைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலக பராமரிப்புக்காக ஜனவரியில் 92 மில்லியன், பெப்ரவரியில் 99 மில்லியன், மார்ச்சில் 226 மில்லியன், ஏப்ரலில் 75 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், பிரதமர் அலுவலகம் தனது செலவினங்களைக் குறைத்து, மற்ற அரசு அலுவலகங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கருத்து என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலக சேவைக்காக வேறு அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டிருந்த 26 பணியாளர்கள் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 16 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்தார்.




