காலிமுகத்திடலில் அமைதிவழியில் போராடியவர்கள் மீது பொதுஜன பெரமுன குண்டர்கள் நடத்திய தாக்குதல், நடைபெறாமல் தடுக்க தாம் தயாரித்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் கடும் அழுத்தங்களை பிரயோகித்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாக்குமூலமொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் காலிமுகத்திடலில் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தென்னகோனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்ட குண்டர் படை உள்ளிட்ட குழுவினர், மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், அலரி மாளிகையின் முன்பாகவும், காலி முகத்திடலிலும் அமைதி வழியில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
இதன்போதே மேற்படி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டாம் என இந்த சிரேஷ்ட அதிகாரிகள் தம்மை அழைத்து அழுத்தம் கொடுத்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே காலிமுகத்திடலுக்கு பேரணியாக செல்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அலரிமாளிகையில் உள்ளவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து வேறு பாதையில் அனுப்புமாறு தேசபந்து தென்னகோனுக்கு ஜனாதிபதி பலமுறை பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன் பிரகாரம், தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அலரிமாளிகையிலிருந்து வெளியேறிய குழுவினரை நவம் மாவத்தை வழியாக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதி அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட பெருந்தொகையானவர்கள் காலி வீதியூடாக மைனகோகம மற்றும் கோட்டகோகம நோக்கி பயணித்திருந்தனர்.
அவர்கள் குழுவை காலி முகத்திடலை நோக்கிச் செல்வதைத் தடுக்க பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் மைதானத்திற்குள் நுழைவதற்கு முன்னர், அந்த குழுவை கலைக்க நீர்த்தாரை பிரயோக வாகனம் மற்றும் கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலங்களின்படி, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் தனிப்பட்ட முறையில் பேசி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த குழுவினர் காலி முகத்திடலை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அவர்களை கலைக்க பொலிஸார் தயாராக இருந்தனர்.
அப்போது, தேசபந்து தென்னகோனை கையடக்கத் தொலைபேசியில் அழைத்த உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், குழுவைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகமோ, கண்ணீர் புகைக் குண்டுகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
கலவரக்காரர்களை தடுக்க போலீசார் கடுமையாக முயன்றும், அதை செயல்படுத்த முடியவில்லை. காலி முகத்திடல் மைதானத்தில் அமைதியாக போராடியவர்கள் மீது கலவரக்காரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்ததாக தேன்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மோதலை கட்டுப்படுத்துவதற்கும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாக தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் நேற்று, பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




