கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ரூ.13.15 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அக்கட்சி சார்பில் வெளியான செய்திக் குறிப்பில்: “கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்து இருந்தார். தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.
அவரது வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 13 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டது. அதற்காக, இன்று தமிழக அரசு தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினை மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மதிமுக செயலாளர் துரை வைகோ சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், அரியலூர் சின்னப்பா, மதுரை பூமிநாதன் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் 5 லட்சம்; நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளருமான வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தங்களது ஒரு மாத ஊதியம் தலா 2 லட்சம்; 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ரூபாய் 1,05,000; ஒருவர் ஒரு லட்சம் என மொத்தமாக 13 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் வரைவோலையாக முதல்வரிடம் வழங்கப்பட்டது.” என்று மதிமுக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




