பொருளாதாரத்திற்கான உதவியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4 பில்லியன் டொலர்களை அரசாங்கம் கோரவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசிய அமைச்சர் சப்ரி, சர்வதேச நாணய நிதியத்துடனான விவாதங்கள் ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கும் என்றார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு வெளி மூலங்களிலிருந்து கிட்டத்தட்ட 3 முதல் 4 பில்லியன் டொலர் பணம் தேவைப்படலாம் என்று குறிப்பிட்டார்.
கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் மத்திய வங்கியின் அண்மைய அறிவிப்பின் ஊடாக, கடன் செலுத்தும் மீதிப் பிரச்சினையை ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளுக்கு பெரும் சுமையாக இருந்த எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஏழைகளைப் பாதுகாக்க அவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு அமைப்பு தேவை என்றார்.
மேலும் நிதியுதவி பெற சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். கடினமான காலங்களில் இந்தியாவும் மிகவும் உதவியாக இருந்ததாக அமைச்சர் சப்ரி கூறினார்.
இந்தியா, சீனா, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் நம்புவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.