கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளித்து எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மீள வழங்குவதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ரொய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் அதனை தெரிவித்தார்.
அவரது பேட்டியின் முக்கிய விடயங்கள்-
“எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் சாதாரண விநியோக வழிக்கு திரும்புவதைப் பார்ப்பதே முதல் முன்னுரிமையாகும், இதன் மூலம் மக்களின் எழுச்சிக்கு தீர்வு காண முடியும்.” என்றார்.
அலி சப்ரி ஏப்ரல் 18 அன்று சர்வதேச நாணய நிதித்துடனான பேச்சுக்களை தொடங்குவதற்கு வாஷிங்டனுக்கு செல்லும் இலங்கை அதிகாரிகளின் குழுவிற்கு தலைமை தாங்குவார்.
மேலும் 21 நாட்களுக்குள் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் அரசாங்கத்தின் சர்வதேச கடனை மறுசீரமைக்க உதவுவார்கள்.
அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் வரிகள் மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்தும் என்றும், பொது நிதியை சரிசெய்யும் முயற்சியில் நஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்த முயல்கிறது என்றும் கூறினார். “இவை மிகவும் விரும்பத்தகாத நடவடிக்கைகள், ஆனால் நாடு இதிலிருந்து வெளிவர நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இவை” என்றார்.




