ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினருக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (25) நடைபெறவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) என்பன இதில் பங்கேற்கின்றன.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) இன்றைய கலந்துரையாடலை புறக்கணித்துள்ளது.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனைக்கும் தீர்வை வழங்கும் சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி வெளிப்படுத்தாமல், பேச்சில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை, நல்லாட்சிக்காலத்தை போல மீண்டும் ஏமாற தயாரில்லையென ரெலோ தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு சந்திப்பது, அரசை நெருக்கடியிலிருந்து பிணையெடுக்கும் முயற்சியென்றும் குறிப்பிட்டிருந்தது.
இதேவேளை, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலந்துடனான சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இன்று ஒரு சுற்றுப் பேச்சு நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.