‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகியாக போலந்து அழகி கரோலினா பிலாவ்ஸ்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2வது இடத்தை இந்திய பின்னணியுடைய அமெரிக்க அழகி பிடித்தார்.
அமெரிக்க நாட்டின் தன்னாட்சி பிரதேசமான புவேர்ட்டோ ரிக்கோவின் தலைநகரான சான் ஜுவான் நகரில் ‘மிஸ்வேர்ல்ட்’ 2021ஆம் ஆண்டின் உலக அழகிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இந்தப் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா (23) உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ஒரு மொடல் அழகி ஆவார்.
இவருக்கு 2019ஆம் ஆண்டின் உலக அழகி டோனி ஆன் சிங் மகுடம் சூட்டினார்.
கரோலினா நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் படித்து வருகிறார். இவர் எதிர்காலத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சிப்பட்டம் பெற விரும்புகிறார். அத்துடன் மொடல் அழகியாகவும் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், உத்வேகம் அளிக்கிற பேச்சாளராகவும் திகழ விரும்புகிறார்.

‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில் அமெரிக்கா வாழ் இந்திய அழகி ஸ்ரீசைனி இரண்டாவது இடம் (முதல் ரன்னர்-அப்) பிடித்தார். இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் 5 வயதாக இருந்தபோது, குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. இவருக்கு இதயத்தில் பிரச்சினை என 12 வயதிலேயே நிரந்தரமான பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அழகி மானசா வாரணாசி முதல் 13 இடங்களுக்குள்தான் வர முடிந்துள்ளது.
இலங்கையின் சேட் கிரின்வுட் முதல் 40 பேர் பட்டியலுக்குள்தான் வர முடிந்தது.
இதேவேளை, மலேசியா சார்பில் கலந்து கொண்ட தமிழ் அழகி லாவண்யா சிவாஜி, இலங்கை அழகியை விட சிறந்த பெறுபேற்றை பெற்றிருந்தார்.





