வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் ஊடக சந்திப்புக்கு பொலிசார் இடையூறை ஏற்படுத்தியுள்ளனர்.
தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் பிரச்சனை தொடர்பில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவரால் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து பதிவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நேற்று (01) ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு ஊடகவியலாளர்கள் சென்று ஊடக சந்திப்பை பதிவு செய்ய தயாராகிய போது பொலிசார் அங்கு நடத்த முடியாது என தெரிவித்தனர். பின்னர் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவரை அழைத்து விபரங்களை பெற்றதுடன், ஊடகவியலாளர்கள் மற்றும் குறித்த ஊடகவியலாளர்கள் பணியாற்றும் ஊடக நிறுவனங்களின் விபரங்களையும் பொலிசார் கோரினர்.
இதனபோது, நாம் ஏன் எமது விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என ஊடகவியலாளர்கள் கோரியதுடன் விபரத்தை கொடுக்க மறுத்தனர். இதன்பின் அமைதியாக நின்ற பொலிசார் ஊடக சந்திப்பு நடைபெற்ற போது அதனை முழுமையாக கண்காணித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



