சென்னையில் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி போதைப் பொருள் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சினிமா துணை நடிகர், கல்லூரி மாணவன் உட்பட 4 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பாட்டியின் அரவணைப்பில் வசித்து வந்த அந்த சிறுமி, தனது வீட்டுக்கு அருகே பானிப்பூரி சாப்பிட செல்லும் போது தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கும் வசந்தகிரீஷ் என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறிய வசந்தகிரிஷ், தாம் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை தனது நண்பர்களிடமும் வசந்தகிரீஷ் கூறவே, பின்னர் நான்கு பேரும் சேர்ந்து ஏற்கனவே நடந்ததை வைத்து இச்சைக்கு இணங்குமாறு சிறுமியை மிரட்டியுள்ளனர். பின்னர், சிறுமியை அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் உறவினர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்னர், சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியவன், அவனின் நண்பர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு போதைப்பொருள் எப்படி கிடைத்தது? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.




