கடந்த 2001ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நுவரெலியா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்னும் தீர்க்கப்படாததால், இந்த வழக்கை தினசரி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி நேற்று (07) அறிவுறுத்தினார்.
இந்த வழக்கை மார்ச் 15, 16, 24 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் குறித்த திகதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினார்.
பாதிக்கப்பட்ட 18 வயது பெண் தற்போது 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் சட்டமா அதிபர் 2004 ஆம் ஆண்டு நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
10 வருட காலப்பகுதியின் பின்னர், 2015 ஆம் ஆண்டு நுவரெலியா மேல்நீதிமன்றம் இரண்டு சந்தேக நபர்களுக்கும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும், இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளுக்காக 18 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்தது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு ஜூரிக்கு முன்பாக விசாரிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியாததால், மேன்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை இடைநிறுத்தியதுடன், நுவரெலியா மேல் நீதிமன்றத்திற்கு விசாரணையை ஆரம்பத்திலிருந்து மீண்டும் தொடங்குமாறு அறிவுறுத்தியது.
அதையடுத்து, வழக்கின் விசாரணையில் ஈடுபட்ட நீதிபதி ஒருவர் விசாரணையில் இருந்து விலகினார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி தர்ஷிகா விமலசிறி இந்த வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மார்ச் 15, 16 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் அவர் நோட்டீஸ் அனுப்பினார்.




