அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் குழுவிற்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் தொற்றுநோய் மாத்திரம் காரணம் அல்ல என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கு கெட்டகொட எம்.பி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
கெட்டகொட எம்.பி.க்கு மேலதிகமாக ரோஹித அபேகுணவர்தன, எஸ்.ஏ.டி.ஜகத் குமார, திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கம்மன்பில கருத்து தெரிவித்த போது, கொவிட் நெருக்கடிக்கு மேலதிகமாக, இலங்கையின் தொடர்ச்சியான கடனைத் திருப்பிச் செலுத்துவதும் பொருளாதார நெருக்கடிக்கு பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.
வேறு எந்த கருத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கம்மன்பிலவின் இந்த கூற்றினால் அரசாங்கம் தர்மசங்கடத்தில் உள்ளதாக கருத்து வெளியிட்ட பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் முன் சென்று இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் அமைச்சர்கள், எம்.பிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.




