எலி மருந்து தடவிய கரட்டை சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம், செங்குட்டைப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தேவசித்து (வயது 55). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கிரேசி அம்மா (வயது 52).
இவர்கள் இருவருக்கும் எனிமா ஜாக்லின் என்ற 19 வயது மகளும், பிராங்க்ளின் என்ற 16 வயது மகளும் பிள்ளைகளாக உள்ளனர். இவர்களில் எனிமா ஜாக்லின் பி.காம் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார்.
கிரேசி அம்மா செங்குட்டைப்பாளையம் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் நிலையில், இவர்களின் கடைக்கு பின்னால் வீடு உள்ளது. வீட்டில் எலித்தொல்லை இருந்ததால், அதனை கட்டுப்படுத்த கரட்டில் விஷம் தடவி கிரேசி வைத்துள்ளார்.
விஷம் தடவி வைக்கப்பட்ட கரட் குறித்து அறியாத எனிமா ஜாக்லின், அதனை சாப்பிட்டு அவதிப்பட்டுள்ளார். தாய் விசாரிக்கையில் விபரீதம் புரியவே, அவரை உடனடியாக மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




