யுத்தத்தின் போது கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி அரசாங்கம் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்தியதாக வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேசியதாகத் தெரிவித்த அமைச்சு, குறித்த செய்தியில் கூறப்பட்ட கருத்துக்களை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பல கொள்வனவுகள் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ திவயின பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஞாயிறு திவயினவுக்கு வழங்கிய நேர்காணலில், அதே காலப்பகுதியில் எரிபொருளுக்கு செலுத்துவதற்கு இலங்கையும் கறுப்புச் சந்தை டொலர்களைப் பெற்றுள்ளதாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
யுத்த காலத்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு பணம் செலுத்துவதற்கு டொலர்கள் தேவைப்பட்டதாக தெரிவித்த நிதியமைச்சர், தாம் ஏனைய அதிகாரிகளுடன் கொழும்பில் உள்ள ‘பெட்டா’ வர்த்தக பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு கறுப்புச் சந்தையில் டொலர்களைப் பாதுகாப்பதற்காக வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வரும் இவ்வேளையில், நாட்டுக்கு மிகவும் தேவையான டொலர்களை கொண்டு வருவதற்கு கறுப்புச் சந்தை முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏதோ ஒரு வகையில் நாட்டுக்குள் டொலர்கள் பாய வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கித் துறைக்கு வெளியே மக்கள் தங்கள் டாலர்களை மாற்றுவதன் மூலம் அதிகப் பணத்தைப் பெறுவதில் தவறில்லை என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.




