மினுவாங்கொடையில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
வவுனியா பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் மூன்று இராணுவத்தினர், தற்போது கொழும்பில் உள்ள இலங்கை இராணுவத் தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கும், மினுவாங்கொடயில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏழு இளைஞர்களுக்குமிடையில் இந்த மோதல் இடம்பெற்றது.
மோதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இராணுவத்தினர் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.