இலங்கை துறைமுக அதிகாரசபை காலி முகத்திடலை பசுமையாக அபிவிருத்தி செய்வதற்காக 125 மில்லியன் ரூபாவை செலவிடுவதாக அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மீண்டும் பசுமைப் புல்வெளிகளை அமைக்க துறைமுக அதிகாரசபையின் நிதி செலவிடப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனகே இதனை தெரிவித்துள்ளார்.
நாடு வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்நோக்கும் வேளையில் துறைமுக அதிகாரசபை அரச நிதியில் பெருமளவிலான தொகையை செலவிடுவது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
நிதிப் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் நாடு சிரமப்பட்டு வருகிறது. எனினும் காலி முகத்திடலை அழகுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
மேலும் துறைமுக அதிகாரசபையானது, காலி துறைமுகத்தின் சுற்றுலா பங்களாவில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த ரூ.158,000ஐ செலவிட்டுள்ளது.
வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்காக துறைமுகத் தொழிலாளர்கள் குறைந்த வளங்களுடன் பணிபுரியும் அதேவேளை, அதிகாரிகள் இந்த நிதியை அத்தியாவசியமற்ற திட்டங்களுக்கு தாராளமாகச் செலவழித்து வருவதாக நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
இதேவேளை, பெற்றோலியம், துறைமுகம் மற்றும் மின்சக்தி கைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அரச வளங்களை விற்பனை செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு அகில இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி புதன்கிழமை நண்பகல் கொழும்பு கோட்டை நிலையத்திற்கு எதிரே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.



