வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உரத் தட்டுப்பாடு மற்றும் அரச சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்க்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தல் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்னாலிருந்து பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான எதிர்ப்பு பேரணி, கொள்ளுப்பிட்டியின் ஊடாக காலி முகத்திடலை சென்றடைந்தது.
பேரணி காரணமாக பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள நாடு முழுவதிலுமிருந்து ஆதரவாளர்களை அழைக்க, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது. எனினும், போராட்டத்தை முடக்க அரசு பலத்த பிரயத்தனத்தில் ஈடுபட்டது. நீதிமன்றங்கள் போராட்டத்திற்கு தடைவிதித்திருந்த நிலையில், ஒவ்வொரு பொலிஸ் நிலைய பகுதிகளிலும் பொலிசார் திடீர் சோதனை சாவடிகளை நிறுவியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற மக்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் நாட்டின் முக்கிய பல நகரங்களில் இன்று காலை முதல் கொந்தளிப்பான நிலைமை காணப்பட்டதுடன், போராட்டங்களும் நடந்தன.
இந்த நிலைமையில், பொதுமக்களின் ஜனநாயக உரிமையை நசுக்கும் முயற்சியில் ஈடுபடாமல், பொலிசாரின் மூலம் ஏற்படுத்தப்படும் தடைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாசா, பிரதமர் மஹிந்தவை கேட்டுக் கொண்டார்.
எனினும், அதேநிலைமை நீடிக்க, மதியமளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துவ பண்டார ஒரு அவசர அறிக்கை வெளியிட்டார். அரசியல் நோக்கத்துடன் போராட்டத்தை தடுக்க முயற்சிக்கும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல தடைகளை கடந்து கொழும்பில் குவிந்த மக்கள், பெரும் பேரணியாக காலி முகத்திடலை சென்றடைந்தனர்.
அங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாச, நாட்டில் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு தயாராகுமாறு பொதுமக்களிடம் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பதவிகளை வழங்கும் போது குடும்பப்பெயர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது.
ஊழல் நடவடிக்கைகள் நாட்டையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் வீழ்ச்சியடைய வைத்துள்ளது. மக்கள் பசியில் இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ள அதேவேளை, பொருட்களின் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
அரசாங்கம் இலஞ்சம், தரகு, மிரட்டி பணம் பறிப்பதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட பைகளை நிரப்பி வருகிறது.
எனவே நாட்டில் ஒரு புதிய பார்வை மற்றும் திட்டத்திற்கான பொறுப்பை ஏற்க மக்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் திறமையாக, அறிவார்ந்த, புத்திஜீவிகளிற்கு பதவிகள் வழங்கப்படும்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு பொருளாதார அபிவிருத்தியுடன் முன்னேற்றமடையும் அதேவேளை ஊழல் மோசடிகளும் ஒழிக்கப்படும் என பிரேமதாச கூறினார்.



