மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் நுழைந்துள்ள சுமனரத்தின தேரர் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். அங்கு பொலிசாரும் நிற்கிறார்கள்.
இன்று (15) இந்த சம்பவம் நடந்து வருகிறது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெவிளியாமடு பிரதேசத்தில் விகாரை அமைக்க காணி வழங்குமாறு கோரி பிரதேச செயலாளரின் அறை வாசலில் உட்கார்ந்துள்ளார்.
அங்கிருந்தபடி கூச்சலிட்டு, ரகளையில் ஈடுபட்டு வருகிறார்.
தான் பல விகாரை அமைக்க விண்ணப்பித்து பல மாதங்களாகி விட்டதாகவும், ஆனால் அனுமதி கிடைக்கவில்லையென்றும், ஆனால் விகாரையை சுற்றி குடியமர்பவர்களிற்கு அனுமதி வழங்கப்படுபவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அலுவலக ஊழியர்கள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர். சம்பவ இடத்தில் பொலிசார் நிற்கிறார்கள். எனினும், அரச அலுவலகத்தில் இடையூறு ஏற்படுத்தும் நபருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திற்கு வருவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டு, சில வாரங்களான நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


