நியூசிலாந்து பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டெர்ன் இணைய நேரடி ஒளிபரப்பு வழி நாட்டின் COVID-19 கட்டுப்பாடுகளில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, அவரது மூன்று வயது மகள் நீவ் குறுக்கிட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
ஆர்டெர்ன் நாட்டு மக்களிற்கு உரையாற்றிக் கொண்டிருந்த போது, உறங்கிக் கொண்டிருந்த மகள் நீவ் விழித்து, ‘மம்மீ?’ என்று அழைத்தது.
அவர் தமது மகளை மீண்டும் படுக்கைக்கு அனுப்ப முயல, மகளோ முடியாது என்று பிடிவாதம் பிடித்தார்.
“நீங்கள் படுக்கையில் இருக்க வேண்டும் அன்பே,” என ஆர்டெர்ன் அறிவுரை கூறினார். “இல்லை,” என்று நீவ் பதிலளித்தார்.
“இது தூங்கும் நேரம் அன்பே – மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள், நான் ஒரு நொடியில் வந்து உங்களைப் பார்க்கிறேன்” என்று, ஒருவழியாக மகளை சமாதானம் செய்து படுக்கைக்கு அனுப்பினார் ஆர்டெர்ன்.
ஆர்டெர்ன் தனது நேரடி ஒளிபரப்பில் மீண்டும் பேசத் தொடங்கினார். இதன்போது, நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பற்றி மக்களுக்கு தெரிவித்தார்.
நீவ்மீண்டும் குறுக்கிட்டு ஆர்டெர்னிடம், “என்ன இவ்வளவு நேரம் ஆகிறது?” என்று கேட்டார். இந்த முறை பிரதமர் தனது நேரடி ஒளிபரப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “மன்னிக்கவும் அன்பே, இவ்வளவு நேரம் ஆகிறது,” என்று அவர் தன் மகளிடம் கூறுவதைக் காண முடிந்தது.
மகளைத் தூங்க வைக்கப்போவதாகக் கூறி நேரடி ஒளிபரப்பை முடித்துக்கொண்டார் பிரதமர் ஆர்டெர்ன்.
ஆர்டெர்ன் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு, நீவ்வை மீண்டும் படுக்கையில் வைக்கப் போவதாகத் தெரிவித்தார். நேரலையை முடிக்கும்போது, நேரலை அமர்வில் இணைந்த பார்வையாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
https://twitter.com/i/status/1457950468844388354
பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோவிற்கு அடுத்து, உலகிலேயே பிரதமர் பதவியிலிருந்தபோது பிள்ளை பெற்றுக்கொண்ட பிரதமர் ஆர்டெர்ன் ஆவார். அவர் 2018இல் நீவை பிரசவித்தார். அதே ஆண்டில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் அமர்விற்கு தனது மகள் நீவ்வை அழைத்துச் சென்றார்.



