ஐக்கிய மக்கள் சக்தியின் தென்னிலங்கையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண, வவுனியாவில் பெண்ணொருவரின் உதவிக்கோரிக்கைக்கு கரிசனை காட்டிய சம்பவமொன்று நடந்தது.
வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடான கூட்டம் நேற்று (02) இடம்பெற்றது.
இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித்மத்துவ பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்கிரமரட்ண, புத்திக பத்திரண, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
இதன்போது வவுனியா வடக்கு பிரதேசத்தில் இருந்து வருகை தந்த போரால் பாதிக்கப்பட்ட விசேட தேவைக்குட்பட்ட முதிய பெண் ஒருவர் தனக்கும், தனது மகன் ஒருவருக்கும் போரால் கால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மலசல கூடத்தை பயன்படுத்த முடியாது உள்ளது. மாற்று மலசலகூடம் ஒன்று தேவையாகவுள்ளது. எனது வீடும் கட்டி அரைகுறையில் உள்ளது. இதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா எனக் கேட்டதுடன், உதவி கேட்ட கடிதத்தை அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இணைப்பாளரிடம் வழங்கியிருந்தார்.
இதன்போது மேடையில் இருந்து புத்திக பத்திரண எம்.பி உடனடியாக அந்த கடிதத்தை தருமாறு பெற்றுக் கொண்டதுடன், மேடையில் இருந்து இறங்கி வந்து அந்த அம்மா அருகில் சென்று அவருடைய கடிதத்தில் தொலைபேசி இலகத்தையும் பெற்றுக் கொண்டு உதவியை வழங்குவதாகவும் தெரிவித்து தனது பிரத்தியேக செயலாளரிடம் அதனை ஒப்படைத்தார்.
அத்துடன், அங்கு உதவி கோரி வந்த மக்களிடம் நேரடியாக தானே சென்று அவர்கள் அருகில் அமர்ந்து இருந்து அவர்களது கோரிக்கைகளையும் எழுதிப் பெற்றுக் கொண்டார்.




