மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ம.தயாபரனுக்கு எதிராக மாநகர மேயரால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரனுக்கும் மாநகர மேயர் தி.சரபணபவனுக்கும் இடையில் பாரிய முறுகல் நிலை நிலவி வருகின்றது. குறித்த முறுகல் நிலையானது மாநகர கட்டளைச் சட்டங்களை கருத்திற் கொள்ளாது மாநகர சபை செயற்பட முடியாது என மாநகர ஆணையாளரினால் சுட்டிக்காட்டி, சபை நடவடிக்கைகளில் ஆணையாளர் தலையீடு செய்தபோது ஆரம்பமானது
இதனைத் தொடர்ந்து மாநகர சபை தீர்மானத்தினூடாக ஆணையாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவ் அதிகாரங்கள் அனைத்தும் பிரதி முதல்வருக்கு மாற்றப்பட்டது. எனினும், சபையின் தீர்மானத்தினை ஆணையாளர் கவனத்தில் எடுத்து செயற்படவில்லை.
ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டவை எனவும் அதனைக் குறைக்கும் அதிகாரம் மாநகர சபைக்கு எல்லையெனவும் சுட்டிக்காட்டி, அவர் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த நிலையில் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்று மாநகர மேயரால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இடைக்கால நிவாரணமாக கடந்த 01.04.2021 இல் தீர்ப்பொன்று வழங்கப்பட்டது. இந் தீர்ப்பின் ஊடாக உண்மையான நிர்வாகத்தையே ஆணையாளர் மேற் கொள்ள வேண்டும் கூறப்பட்டது.
இதற்கு பிற்பாடு இந்த தீர்ப்பினை ஆணையாளர் மீறிவிட்டதாகவும் நீதி மன்றத்தை அவமதித்துவிட்டதாகவும் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று ஆணையாளருக்கு எதிராக மேயரினால் மட்டடக்களப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஆணையார் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வந்துள்ளாதாகவும், பிணையில் வந்த ஒருவர் பதவியில் இருக்க முடியாது என தெரிவித்து மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோருக்கு மாநகர மேயர் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் குறித்த வழக்கானது நேற்று மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆணையாளர் சார்பாக ஆஜராகிய றுக்சி கபிட் தலமையிலான சட்டத்தரணிகள் குழுவினரின் சமர்பணங்களை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்யவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு செலவையும் மனுதாரர் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.