இலங்கை கிரிக்கெட்டின் 50 ஓவர் சுற்றுத் தொடரில் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) பங்கேற்கலாமென்ற தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச மறுத்துள்ளார்.
ரக்பி அணிகளில் ஆடி வரும் ரோஹித, கிரிக்கெட் ஆடவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நேற்றிரவு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, ரோஹிதா நேற்று முன்தினம் மாகோனாவில் உள்ள சர்ரே மைதானத்தில் நடந்த பயிற்சி போட்டியில் பங்கேற்றதாகவும், 50 ஓவர் கிளப் போட்டியில் களுத்துறை அணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அவர் எல்பிஎல், வீரர்கள் தெரிவிற்கு தகுதி பெறுவது அல்லது கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தகுதி பெறுவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
“கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபட எனக்கு எந்த எண்ணமும் இல்லை, எல்பிஎல் அணிக்காக விளையாடும் எண்ணமும் இல்லை” என்று ரோஹித வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம்மாதம் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடக்கும் ரக்பி செவன்ஸ் போட்டிக்கு தயாராகி வருகிறேன். தற்போது நான் எங்கள் பழைய தோமியன் அணியுடன் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், களுத்துறை டிசி அணியின் தலைவர் நேற்று கொழும்பு ஊடகமொன்றிற்கு வெளியிட்ட தகவலில், அணியில் விளையாடுவது பற்றி ரோஹித தன்னை அணுகியதாக கூறினார்.
“அவர் வந்து என்னிடம் பேசினார், அவர் எங்கள் கிளப்பில் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறினார். அவர் கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களாக விளையாடி வருகிறார், மேலும் அவர் வரவிருக்கும் 50 ஓவர் கிளப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறினார். அவர் 50 ஓவர் போட்டிக்கு அப்பால் தொடர்ந்து விளையாட விரும்புகிறாரா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவரது ஆரம்பத் திட்டம் அந்த போட்டியில் விளையாடுவது” என்று களுத்துறை நகர கழக தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.