உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார்.
முன்னதாக லக்கிம்பூர் சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், “இந்தச் சம்பவம் அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க அரசியலைக் கையில் எடுத்துள்ளதையே காட்டுகிறது. இது விவசாயிகளின் பூமி. பாஜகவின் பூமி அல்ல. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாரைச் சென்று நேரில் சந்திப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால் நான் ஏதோ குற்றம் செய்வதுபோல் என்னைத் தடுத்து நிறுத்துகின்றனர். என்னைக் கைது செய்ய வாரன்ட் இருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், லக்கிம்பூரில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறிய போலீஸார் பிரியங்காவை சீதாபூர் பகுதியில் ஒரு விடுதியில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை சேதப்படுத்தியதாகவும், காரை தீயிட்டும் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் லக்கிம்பூரில் வன்முறை வெடித்தது. போலீஸார் கூட்டத்தை தடியடி நடத்திக் கலைத்தனர். வன்முறை களமாக மாறிய லக்கிம்பூரில் கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற வன்முறை மோதலில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் பலியாகினர். மேலும் இன்று காலை வன்முறைப் பகுதியிலிருந்து பத்திரிகையாளர் ஒருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.