ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 வது பொது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று காலை நாட்டை விட்டு வெளியேறினார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ புதன்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் தலைவராக இலங்கையை விட்டு வெளியேறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். ஐநா பொதுச்சபையில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வு செப்டம்பர் 14 ஆம் திகதி தொடங்கியது, பொது விவாதம் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறும்.
உலகளாவிய தொற்றுநோயால், பொதுச் சபை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படும் பிரதிநிதிகளின் அளவு மட்டுப்படுத்தப்படும். அத்துடன், ஐ.நா. தலைமையகம் செல்வதற்கு பதிலாக முன் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளை வழங்க ஐநா உறுப்பு நாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
100 -க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசுத் தலைவர்கள் நேரில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல உலகத் தலைவர்கள் ஒரு வார கால பொது விவாதத்தில் உரையாற்ற உள்ளனர்.
இந்த விஜயத்தின் போது பல உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ இருதரப்பு கலந்துரையாடலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பீரிஸ், ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவு செயலாளர் ஜெயந்த கொலம்பகே ஆகியோர் ஜனாதிபதியுடன் நியூயோர்க் செல்கின்றனர்.