நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், இவர் மஹவ, குருநாகல் பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (14) நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான இரண்டாவது சந்தேகநபர் 18 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
தனியார் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து கைக்குண்டை போலீசார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரே கைக்குண்டை வைத்து, அவரே பொலிசாருக்கு தகவல் வழங்கியது தெரிய வந்தது.
அந்த நபர் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பணப்பரிசு கிடைக்கும் என நம்பி, கைக்குண்டை வைத்ததாக தெரிவித்துள்ளனார். எனினும், இதனை பொலிசார் நம்பவில்லை. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு, கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இலாச்சியில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளதாக கைதான திருகோணமலை இளைஞன் தெரிவித்துள்ளார்.
கட்டட நிர்மாணப்பணிகளில் பணியாற்றும் மேற்படி சந்தேகநபர், மூன்று மாதங்களுக்கு முன்னர், அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திருத்தப் பணிகளுக்காக வந்துள்ளார்.
அங்குள்ள அறையொன்றின் மேசையின் இலாச்சியில் இருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை மீட்டுள்ளார்.
கைக்குண்டை இந்த சந்தேகநபர் வைத்துக்கொண்டதுடன், தோட்டாக்களை அவருடன் இருந்த மஹவ, குருநாகல் பகுதியை சேர்ந்தவர் எடுத்து சென்றுள்ளார். அவரே இன்று கைதான இரண்டாவது சந்தேகநபர்.



