மட்டக்குளி பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கிராம சேவகரின் கணவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 இராணுவ புலனாய்வாளர்களை நாளை (16) வரை தடுப்பில் வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 இராணுவத்தினரும் மட்டக்குளி பிரதேசத்தின் கிராம சேவகரான பெண்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணியொன்றினால் முகத்தை மறைத்து கட்டப்பட்டு, கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் காக்கை தீவு கடற் கரையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அகிலா என அறியப்படும் கிராம சேவகரின் கணவரின் சடலமே கரையொதுங்கியது. அவருக்கு 40 வயது.
கிராம சேவகருக்கும், இராணுவ கோப்ரல் ஒருவருக்குமிடையிலிருந்த கள்ளக்காதலே கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
கள்ளக்காதலை தெரிந்து கொண்டதால் கணவன் தன்னை துன்புறுத்துவதாக கிராம சேவகர், இராணுவ கோப்ரலிடம் தெரிவித்ததை தொடர்ந்து இந்த கொலை நடந்துள்ளது.
மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றும் 5 இராணுவத்தினர் ஓகஸ்ட் 14ஆம் திகதி கிராம சேவகரின் கணவனை கடத்தி, கை, கால்களை கட்டி, அடித்துக் கொன்று களனி ஆற்றில் வீசியுள்ளனர். ஓகஸ்ட் 20ஆம் திகதி அவரது சடலம் கரையொதுங்கியது.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றிய, புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 பேரை இராணுவ பொலிஸ் பிரிவு கைது செய்து மேலதிக விசாரணைக்ளுக்காக பொலிசாரிடம் ஒப்படைந்திருந்து. இந்நிலையில் பொலிஸார் பெண் கிராம சேவகரைக் கைது செய்திருந்தனர்.
நேற்று (14) குறித்த பெண் கிராம சேவகரையும், இராணுவ புலனாய்வு கோப்ரலையும் மட்டும் கொழும்பு பிரதன நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர் செய்த பொலிஸர், அவர்களை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஏனைய 5 இராணுவத்தினரும் நேற்று பிற்பகல் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே அவர்களை குற்றவியல் சட்டத்தின் 290 ஆம் அத்தியாயத்துக்கு அமைய 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதித்தது.



