தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனினால் அனுப்பப்பட்ட கடிதம் எனது மின் அஞ்சலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் அனுப்பப்பட்டிருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் போர்க்குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றிருந்தமையால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐநாவுக்கு அனுப்பபட்ட கடிதத்தில் விடுதலைப்புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்று கோரப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
குறுகிய நேர இடைவெளியில் இடம்பெற்ற இந்த இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புக்களில், ஒரே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நேரெதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
ஒரே கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரெதிரான வேறுவேறு கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இதில் எது உண்மையான கருத்து என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை இன்று (11)தொடர்பு கொண்டு கேட்ட போது,
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கருத்து தொடர்பில் நான்
அறிந்திருக்கவில்லை. அது தொடர்பில் நான் ஆராய்ந்துவிட்டே கூறுகிறேன்.
அனால் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளை விசாரிக்க வேண்டும் என்று கோரவில்லை. இதுதான் உண்மை. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவ்வாறு கூறியிருந்தால் அது தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவில் ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.




