தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்துமாறு கோரி, கத்தோலிக்க பாதிரியார்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 75 பேர் கையெழுத்திட்ட மனு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல சர்வதேச நாடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சர்வதேச சமூகத்தை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சட்டத்தரணி ஹிஸ்புல்லா சிறையில் அடைக்கப்பட்டு, 26 ஓகஸ்ட்டுடன் 500 வது நாளையெட்டியதை குறிப்பிட்டு, இந்த மனு அனுப்பி வைக்க்பட்டுள்ளது.
கொழும்பின் 14 வது ஆங்கிலிகன் பிஷப் பிஷப் துலீப் டி சிக்கெரா, தேசிய கிறிஸ்தவ கவுன்சிலின் முன்னாள் பொது செயலாளர் அருட்தந்தை ஜெயசிறி டி பீரிஸ், அருட்தந்தை எம்.சக்திவேல், அருட்தந்தை ஆண்ட்ரூ தேவதாசன், அருட்தந்தை மார்க் பில்லிமோரியா, அருட்தந்தை நந்தன மனதுங்க, அருட்தந்தை ஓஸ்வால்ட் பி. ஃபிர்த், அருட்தந்தை டெரன்ஸ் பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை மக்ஸ்வெல் தாஸ் மற்றும் 23 சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம், நீதி மற்றும் அமைதிக்கான பெண்கள் அமைப்பு, மாற்று கொள்கைகளிற்கான நிலையம் மற்றும் நவ சமசமாஜ கட்சி (NSSP) உள்ளிட்ட கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஹிஸ்புல்லாவின் வழக்கு மற்றும் பிற ஒத்த வழக்குகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நிகழும் கொடூரமான மனித உரிமை மீறல்களின் அடையாள பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்று மனு வலியுறுத்துகிறது.
இந்த மனுவின் படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐசிசிபிஆர்) சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை இப்போது ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின் படி, ஹிஸ்புல்லா ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படவில்லை, ஆனால் இந்த சட்டங்களுக்கு முரணாக மாணவர்களுக்கு சில அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்கு ஆதாரம் ஒரு குழந்தையின் அறிக்கையாக மட்டுமே தோன்றுகிறது. அதில் ஹிஸ்புல்லா மட்டக்களப்பில் ஒரு பல்கலைக்கழகத்தை வைத்திருக்கும் நபர் என்று விவரிக்கப்படுகிறார்.
ஹிஸ்புல்லாவை உடனடியாகவும் நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



