கல்முனையில் இருந்து மட்டக்களப்பு கல்குடாவிற்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் சம்பவ தினமான இன்று (18) பகல் 12.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது சந்தேகநபர் மட்டு. கல்குடாவில் இருந்து கல்முனைக்கு டியோ ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் போதை மாத்திரைகளை இருக்கைக்கு கீழ் மறைத்து எடுத்து வந்த நிலையில் கல்முனை பகுதியில் வைத்து நிறுத்தி சோதனையிட்ட போது 3 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதாகவும் 32 வயதுடையவர் எனவும் தெரிய வந்துள்ளது.
இவர் கொழும்பிலுள்ள முகவரிடம் இருந்து நேரடியாக போதை மாத்திரைகளை இறக்குமதி செய்து மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களுக்கான போதை மாத்திரை ஏகவிநியோகத்தராக கடந்த 6 வருடங்களாக செயற்பட்டு வருவதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.