அடுத்த மதுரை ஆதீனம் இவர்தான்! நித்திக்கு அல்வா தானா?
1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது மதுரை ஆதீனம். இதன் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் உடல் நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது (77).
அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9 ஆம் தேதி திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவுக்குப் பிறகு அடுத்த ஆதீனம் நான் தான் என நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார். அருணகிரி நாதரின் மறைவு காரணமாக கைலாசா நாட்டில் ஒரு வாரம் துக்கம் அணுசரிக்கப்படும் என்றும், கைலாசா நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி அவருக்கு அடுத்த ஆதீனமாக அதாவது 293 ஆவது ஆதீனமாக என்னை முறைப்படி நியமித்தார். அதன்படி ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளான நான்தான் மதுரை ஆதீனத்தின் வாரிசு, வம்சாவளி, சந்ததி. அதன்படி மதுரை ஆதீனத்தின் சட்ட ரீதியான, ஆன்மீக ரீதியான, சடங்குகள் ரீதியான அனைத்து உரிமங்களும், கடமைகளும் என்னிடமே உள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது 293 வது மடதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்துள்ளார். மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாள்களில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் கூறினார்.




