யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டு கடத்த முற்பட்ட 2.250 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஐஸின் (பளிங்கு மெதம்பேட்டமின்) பெறுமதி 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்டது எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் கடற்படை, வல்வெட்டித்துறை பொலிஸ் இணைந்து முறியடிக்கப்பட்டது என்று கடற்படையினர் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் 38, 34, 28 வயதுடைய மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் கூறினர்.
கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின் போது பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து வாகனம் ஒன்றில் ஏற்ற முற்பட்ட போது போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை கடத்த முற்பட்டனர் என்று மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். வல்வெட்டித்துறை பொலிஸ் மேலதிக விசாரணை செய்து வருகின்றனர்



