உலகிலேயே ஆகச்சிறிய குழந்தை சிகிச்சையின் பின் வீடு சென்றுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த குவெக் வீ லியாங், வாங் மீ லிங் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். சிங்கப்பூர் நிரந்தரவாசிகளான அவர்கள், பிரசவத்திற்காக மலேசியாவுக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தனர். அங்கு அவர்களது நான்கு வயது மகன் உள்ளார். குவெக்கின் பெற்றோர் பராமரிப்பின்கீழ் அச்சிறுவன் இருக்கிறான்.
2வது முறை கருவுற்ற வாங் மீ லிங், ப்ரீ க்ளம்ப்சியா என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீர் வழியாக புரோட்டீன் அதிக அளவு வெளியேறியது.
கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி, வோங்கிற்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
கர்ப்பகாலத்தின்போது அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது கண்டறியப்பட்டதால் அங்கு அவருக்கு அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கெனவே தமது மகனைப் பெற்றெடுத்தபோது பிரசவம் வழக்கமான ஒன்றாக இருந்ததாகக் குறிப்பிட்டவோங்கிற்கு யூ சுவானின் பிறப்பும் அதன் சிறிய அளவும் அதிர்ச்சி தந்தது.
காரணம், குவெக் யூ சுவான் பிறந்தபோது எடை வெறும் 212 கிராம். இது ஒரு அப்பிளின் எடைக்கு சமம். இதன் மூலம் உலகின் மிகச் சிறிய குழந்தை என அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 2018இல் அமெரிக்காவில் 245 கிராமில் பிறந்த குழந்தை, உலகின் மிகச் சிறிய குழந்தையாக கருதப்பட்டது.
சிங்கப்பூர் குழந்தைக்கு குவெக் யூ சுவான் என்று பெயர் சூட்டப்பட்டது. எடை குறைவாக இருப்பதால் குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறினர். எனினும் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குழந்தையின் பெற்றோரால் சிகிச்சைக்கான செலவை ஈடுகட்ட முடியவில்லை. அவர்களுக்கு உதவ முன்வந்த தன்னார்வ அமைப்பு, பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தது. சில வாரங்களிலேயே ரூ.2 கோடிக்கும் அதிகமான நிதி சேர்ந்தது. குழந்தையின் மருத்துவச் செலவுக்கு இதுவரை ரூ.1 கோடி செலவாகியுள்ளது. மீதி பணத்தை தன்னார்வ அமைப்பிடம் திரும்ப அளித்துவிட்டனர்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குழந்தையின் உடல்நலம் தேறி ஓரளவுக்கு ஆரோக்கியமாக உள்ளது. தற்போது குழந்தை எடை 6.3 கிலோவாக உள்ளது. 13 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 9ஆம் திகதி குழந்தையுடன் பெற்றோர் வீடு திரும்பினர். குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை நீடிப்பதால் வீட்டில் வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தையை பராமரிக்க பெற்றோருக்குசிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.



