யாழ் மாநகரசபை எல்லைக்குள் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை மையமாக கொண்டு தமிழ்பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு யாழ் மாநகரசபை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபை அறிவித்தல்கள் பேஸ்புக் லைக்ஸை குறிவைத்ததா?: நடைமுறை சீர்கேடுகள் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியது. அது குறித்து யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் விளக்கமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த விளக்கத்தில்-
எங்களுடைய செயற்பாடுகள் எல்லாவற்றையும் காழ்ணர்ச்சியுடன் சில முகவரியில்லாத முகப்பு புத்தகங்களுக்கும் ஒரு சில நபர்களுக்கும் இந்த மாநகரத்தில் எச் செயற்பாடுகள் நடைபெற்றாலும் தனி ஒரு நபர் மீதுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக அச் செயற்பாட்டினை எவ்வாறு விமர்சிக்கலாம் என்று காரணம் தேடுகின்றவர்களுக்கு சில விடையங்களில் தனிப்பட்ட அரசியல் கோபதாபங்களை தாண்டி வரவேற்க வேண்டிய விடையங்களில் மதித்து நடப்பது எங்கள் சமூகத்தின் நல்ல அரசியல் கலாச்சாரத்திற்கும் வழிவகுக்கும் என்ற அறம் சார்ந்த பண்பு தெரியாமல் இருக்கலாம்.
தாங்கள் பொறுப்புள்ள ஊடகம் என்ற ரீதியில் தங்களுடைய மேற்கூறிய செய்திக்கான எனக்கு தெரிந்ததை இங்கு பதிவிடுகின்றேன்.
குறித்த கடைக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக குறித்த கடை உரிமையாளரால் மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் தொலை பேசியில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இது தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த மாதம் 22 ஆம் திகதியே யாழ் மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், பொறியிலாளார், இறைவரிபகுதி அதிகாரிகள், திட்டமிடல் பகுதி அதிகாரிகள் என பலரும் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
அவ்விஜயத்தில் குறித்த கடை உரிமையாளர் தனது கடைக்கு முன்னால் வாகனங்கள் தரிப்பதாகவும் அதனை தடை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விட்டார் அது மட்டுமின்றி தாங்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடின் தான் சட்டத்திற்கு புறம்பான வகையில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என்றும் கூறினார்.
குறித்த கடைக்கு அருகில் பட்டா எனப்படுகின்ற சிறியரக வாடகை வாகனங்களின் தரிப்பிடம் உள்ளது அவர்கள் சிலவேளைகளில் குறித்த கடைக்குமுன்னால் நிறுத்தி விடுவார்கள். இது தொடர்பில் பல தடவை குறித்த சிறியரக வாடகை வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டது. களவிஜயம் நடைபெற்ற அன்றும் அவ்வாறு அறிவுறுத்தப்பட்டது. வேறு இடங்களில் இருந்து வருகின்ற சில வாகனங்கள் குறித்த பகுதியில் நிறுத்தி விட்டு சென்று விடுவார்கள் அதற்கு தாம் என்ன செய்வது என்று கேட்டார்கள்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி பெரும் வர்த்தகப் பகுதி குறித்த பகுதிக்கு பல இடங்களில் இருந்தும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நபர்கள் வருகின்றார். அவர்கள் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்லகூடியவை. குறித்த நபரின் கடைக்கு முன்னால் மட்டுமல்ல ஸ்ரான்லி வீதி முழுவதும் உள்ள கடைகளுக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தப்பட்டு தான் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரான்லி வீதியில் காணப்படும் நெருக்கடி மற்றும் இவ்வாறான சம்பவங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் குறித்த வீதியினை அகலிக்கும் பணிகள் இடம் பெறவுள்ளது. மாநகர முதல்வர் எடுத்த இடைவிடாத முயற்சியினால் குறித்த வீதியில் இவ் அகலிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இது தொடர்பில் இவ் வருட ஆரம்பத்தில் அனைத்து கடை உரிமையாளர்களையும் சந்தித்து அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. ஆக ஸ்ரான்லி வீதி அகலிக்கப்பட்டு வாகனத்தரிப்பிடங்கள், மற்றும் நடைபாதை, வடிகால் வசதிடன் மீள் அமைக்கப்படவுள்ளது. அதற்கான கேள்வி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கோரப்பட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. பணிகள் ஆரம்பிப்பது மட்டுமே மிகுதியாக உள்ளது.
மேலும் இவ் போக்குவரத்து நெருக்கடிகளையும் அத்துமீறிய வாகன தரிப்புகளுக்கு தண்ட அறிவிடுவது மற்றும் அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரம் மாநகர சபைக்கு இருக்கின்றது. ஆனால் அண்மையில் அதனை ஒழுங்குபடுத்துவதுற்கு என்று மாநகர முதல்வர் பணியாளர்களை நியமித்தபோது வீதி ஒழுங்குகளை மேற்கொள்ள மாநகரசபைக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்று பயங்காரவாத தடைச்சட்டத்தில் பொலிசார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இன்று வரை குறித்த வழக்கு விசாரணையில் உள்ளது. சரி மாநகர சபைக்கு இதனை செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும் போக்குவரத்துப் பொலிசாருக்குத்தான் இதற்கான அதிகாரம் உள்ளது என்று அதிகாரத் தொனியில் சொல்லுகின்ற பொலிசார் ஏன் போக்குவரத்துப் பொலிசாரைக்கு கொண்டு தமக்கு மட்டுமே இருப்பாதாக கூறுகின்ற அதிகாரத்தை செயற்படுத்தாமல் அதனைக் கண்காணிக்காமல் கைகளைக் கட்டிவேடிக்கை பார்க்கின்றார்கள்.
தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கின்றது என்று கூறுகின்ற அவர்களும் செய்ய மாட்டார்கள் அதிகாரம் உள்ள நாம் செய்ய துணிந்தால் பயங்கரவாதச் சட்டம்தான் பாயும் என்றால் எவ்வாறு ஒழுங்குபடுத்த முடியும்.
எந்த ஒரு அறிவித்தல்களும் பேஸ்புக் லைக்கிற்கானவை அல்ல மாறாக எமது மாநகரம் மற்ற மாநகரங்களுக்கு முன்மாதிரியாக தூய்மையான மாநகரமாக உள்ளது என்ற நிலை உருவாக்கி அனைவரம் எமது மாநகரத்தை லைக் பண்ணவேண்டும் என்பதற்காகவே
யாழ் மாநகரசபை அறிவித்தல்களில் சில வெறும் அறிவித்தல்களாக இருக்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அறிவித்தல்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படாமலும் இல்லை. அவ் முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பல இடையுறுகள் ஏற்பட்டதனையும் மறந்திருக்க மாட்டீர்கள்.
நாம் மாநகர மக்களுக்கு எல்லாம் செய்து விட்டோம் என்று என்றைக்கும் நாம் சொல்ல மாட்டோம் ஆனால் இந்த மாநகரத்திற்கு பலவற்றை செய்ய தொடங்கியிருக்கின்றோம் என்பதை நான் மறுக்கவும் மாட்டேன் இதனை எமது மாநகர மக்களின் கருத்தாய்வுகளில் இருந்து எம்மால் அறியகூடியதாகவுள்ளது. வரப்போகின்ற எமது எஞ்சியகாலங்களும் இந்த மாநகரத்திற்கானவை.




