கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு கொழும்பில் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர கூறுகையில், ஜூலை கடைசி வாரத்தில் கொழும்பில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளர்களில் 75 சதவீதமானவர்கள் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வக சோதனைகளில் கண்டறிந்துள்ளன என்றார். .
ஜூலை முதல் வாரத்தில் வெறும் 13 சதவீதமானவர்களே டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
டெல்டா திரிபு ஆரம்பத்தில் கொழும்பிபு, தெமட்டகொட பகுதியில் மட்டுமே கண்டறியப்பட்டது.
எனினும், பின்னர் கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, மஹாபகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் டெல்டா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸின் டெல்டா வகையின் பரவலானது அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானது என்பதை சுகாதார அமைச்சு பின்னர் ஒப்புக்கொண்டது.




