அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் மதியம் 1 மணியளவில் பாரிய மரம் ஒன்று உடைந்து விழுந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.
இதனால் மரத்தை அகற்றி இயல்புநிலை திரும்பும் வரை அட்டனிலிருந்து நுவரெலியா செல்லும் அதேபோல நுவரெலியாவிலிருந்து அட்டன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தினர்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், கொட்டகலை பிரதேச சபையினரும், தோட்ட பொது மக்கள் மற்றும் பத்தனை பொலிஸாரும் இணைந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 3 மணியளவில் மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்டது.
எனினும், சீரற்றகாலநிலை தொடர்ந்தால் மரம் முறிந்து விழும் அபாயமிருப்பதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

–க.கிஷாந்தன்-



